states

img

பனாரஸ் ஐஐடி வளாகத்தினுள் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்; மாணவர்கள் போராட்டம்!

பனாரஸ் ஐஐடி வளாகத்தினுள் மாணவி ஒருவர் பாலியல் அத்துமீறலுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து பனாரஸ் பலகலைக்கழக மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பனாரஸ் பல்கலைக்கழக வளாகத்தினுள் நவம்பர் 2-அன்று நள்ளிரவு 1.30 மணியளவில் நடந்துசென்ற விடுதி மாணவியை அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று நபர்கள் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர்.அதனை வீடியோவும் எடுத்து வைத்துக்கொண்டு இதை யாரிடமும் கூறக்கூடாது என்று அந்த மாணவியை மிரட்டியுள்ளனர்.

இதுகுறித்து கல்வி வளாகத்தின் பாதுகாப்பு அதிகாரியிடம் அம்மாணவி புகார் அளித்துள்ளார். இதனையறிந்த பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து மாணவர்கள் கூறும்போது, ஐஐடி வளாகத்தினுள் இதுபோன்ற பாலியல் அத்துமீறல் சம்பவங்கள் நடப்பது வாடிக்கையாகி வருகிறது. ஆனாலும் பல்கலைக்கழக நிர்வாகம் இதனைத் தடுப்பதற்கு எந்தவித பாதுகாப்பு நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாட்டின் புகழ்வாய்ந்த கல்வி நிலையங்களில் ஒன்றாகக் கருதப்படும் வளாகத்தில் இத்தகைய சம்பவங்கள் நடப்பதும், மாணவிகள் பாதுகாப்பற்ற சூழலை உணர்வதும் அவமானகரமானது என்று தெரிவித்தனர்.

குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும். பலகலைக்கழக வளாகத்தினுள் பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்றிலிருந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.போராட்டம் நடைபெறும் இடத்திற்கு ஐஐடி இயக்குநர் வரவேண்டும் என்பதையும் வலியுறுத்தினர்.

இதுகுறித்து பேசிய காவல்துறை ஆணையாளர், பிரிவு 354பி, ஐடி சட்டம் 66இ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகளைப் பிடிப்பதற்கு மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்களை அடையாளம் காண்பதற்கு வளாகத்தினுள் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகிறோம் என்று கூறினார்.

மாணவர்களின் போராட்டத்தை தொடர்ந்து பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.